திருடர் குல திலகமே.. ஊழலின் மறு உருவமே... அணிலுக்கு அடிச்ச ஜாக்பாட்.. பரபரப்பு போஸ்டர்கள்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் பாஜகவினருக்கும் மோதல் உச்சகட்டத்தில் உள்ளது . இந்த நிலையில் கரூர் நகரில் பல இடங்களில் திருடர்குல திலகமே.. ஊழலின் மறு உருவமே.. அணிலுக்கு அடித்த ஜாக்பாட்.. 5000 கோடிக்கு அதிபதியாக்கிய பி ஜி ஆர் ஊழல்.. என்று செந்தில் பாலாஜியை கடுமையாக சாடி பாஜகவினர் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர். இது கரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த போஸ்டர்களை பாஜகவினர் தங்களது சமூக வலைத்தள பக்கங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் உள்ள போஸ்டர்களை போலீசார் கிழித்து வருகின்றார்கள்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்து ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கை விடுத்து மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஊழல்களை குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். இது திமுகவினர் மத்தியில் ஒரு பக்கம் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் அதே நேரம் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்தது முதலே பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதிலும் செந்தில் பாலாஜியும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கரூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் ஆன மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. டுவிட்டர் பக்கங்களில் மோதல் செய்து வந்தனர்.
தொடர்ந்து செந்தில் பாலாஜி மீது அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். ஆனால் அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்து ஆளுநரிடம் புகார் அளித்துள்ளதோடு மட்டுமல்லாமல் கரூர் நகரம் எங்கிலும் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள் பாஜகவினர்.