காதலியை சந்திக்க பர்தாவுடன் சென்ற இளைஞர்... வசமாக சிக்கியதால் பரபரப்பு

 
muslim burtha

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் தனியார் மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் பர்தா அணிந்த நிலையில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த வாலிபர் பிடிபட்டனர்.


கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே ஸ்ரீ மூகாம்பிகா என்ற தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான உள் மற்றும் வெளி நோயாளியாகள் வந்து செல்கின்றனர். இதனால் ஆஸ்பத்திரியில் பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் அவர்கள் பணியில் இருந்த போது பர்தா அணிந்த நிலையில் சந்தேகத்திற்கிடமாக யாரோ சுற்றி வருவதை பார்த்தனர். 

பர்தா அணிந்தவர் ஆஸ்பத்திரியின் பல பகுதிகளுக்கும் சென்று வந்ததால், அவர் தீவிரவாத செயலில் ஈடுபட வந்திருக்கலாமோ என காவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பர்தா அணிந்து திரிந்தவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் எந்தவித பதிலும் அளிக்காததால், பர்தாவை விலக்கி பார்த்தபோது, வாலிபர் ஒருவர் தான் பர்தா அணிந்து வந்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து ஸ்ரீ மூகாம்பிகா தனியார் மருத்துவக் கல்லூரி சார்பில் குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் அந்த வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர், கோழிக்கோடு பகுதியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வருவதாகவும், தன் காதலியிடம் தினமும் போனில் பேசி வருவதாகவும், அவரை பார்க்க கல்லூரிக்குள் நேரடியாக சென்றால் முடியாது என்பதால் கேரளாவில் இருந்து வரும்போதே கடைக்கு சென்று பர்தா வாங்கி வந்ததாகவும் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து மாணவரின் பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர்கள் உடனடியாக குலசேகரம் போலீஸ் நிலையம்   வந்து, மகனின் செயல் தவறு என்று மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு வாலிபரை அழைத்து சென்றனர். வாலிபர் பர்தா அணிந்து மருத்துவக் கல்லூரிக்கு வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.