இன்று நடக்க இருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

 
ப்

இன்று நடைபெறுவதாக இருந்த வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.  அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் இதை அறிவித்திருக்கிறது.

நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது என்று  அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி. எஸ். வெங்கடாசலம் முன்னர் அறிவித்திருந்தார்.  அதில்,    ’’வங்கி கிளைகளில் எங்கு கூடுதல் ஊழியர்கள் உள்ளார்களோ அவர்களை ஊழியர் பற்றாக்குறை இருக்கும் வங்கிகளுக்கு மாற்ற வேண்டும்.  இதன் மூலம் அனைத்து கிளைகளிலும் சமமான ஊழியர்கள் இருப்பார்கள். ஆனால் சில வங்கிகள் இந்த ஒப்பந்தத்தை மீறி ஊழியர்களை ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பணியிட மாற்றம் செய்கிறது.   ஒரு வங்கியில் 3 ஆயிரம் ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  

ப்

 இது தொழிலாளர் சட்டத்தை மீறும் செயல்.  சில வங்கிகள் பல்வேறு பணிகளுக்கு அயல் பணி நடவடிக்கை,  பொதுமக்களிடம் வைப்பு தொகை வசூலிக்கும் பணியில் ஈடுபட்ட 240 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கிறது.  அவர்களுக்கான எந்தவித இழப்பீட்டையும் வழங்கவில்லை . இதற்கெல்லாம் தீர்வு காணுகின்ற வகையில் தான் வேலை நிறுத்தம் செய்வதற்காக வங்கி யூனியன் சங்கம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

 இதை அடுத்து கடந்த ஐந்தாம் தேதி மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடந்தது .   அதன் பின்னர் பத்தாம் தேதி டெல்லியில் தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையருடன் பேச்சு வார்த்தை நடந்தது.   இந்த பேச்சு வார்த்தையில் வங்கிகளின் நிர்வாக தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை.  இதற்கிடையில் தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையரின் கோரிக்கையை ஏற்று  வங்கிகள் கூட்டமைப்புடன் மீண்டும் ஒரு சுற்று பேச்சு வார்த்தை நடந்தது .  இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால்.  ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் 19ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் இந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்திருக்கிறார்.    இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி. எஸ். வெங்கடாசலம்,    ’’தொழிலாளர் நல ஆணையர் உடனான பேச்சுவார்த்தையில் அனைத்து பிரச்சினைகளிலும் புரிந்துணர்வு எட்டப்பட்டிருக்கிறது.  மேலும்,  கூட்டத்தில் ஐபிஏ மற்றும் தொழிற்சங்கங்கள் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை பற்றி விவாதிக்க சி. எல் .சி அறிவுறுத்தி இருக்கிறது . அரசாங்க பிரதிநிதியும் வங்கி ஊழியர் சங்கங்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டார். ஐபிஏ,   வங்கிகள் ஆகிய இருதரப்பும் பிரச்சனைகளை தீர்க்க ஒத்துக் கொண்டன.  அதனால் எங்களின் வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்படுகிறது ’’என்று அறிவித்திருக்கிறார்.