தங்கம் விலை அதிரடியாக ரூ. 248 உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து ரூ.41,768க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து தொடர்ந்து விலை உயர்ந்து வந்தது. கிட்டத்தட்ட 28 மாதங்களுக்குப் பிறகு, கடந்த 31ம் தேதி தங்கம் விலை சவரன் 41 ஆயிரத்தை தாண்டி ஒரு சவரன் ரூ.41,040க்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் 2ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாயும், 3ம் தேதி 328 ரூபாயும் மற்றும், 4ம் தேதி 376 ரூபாயும் என 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.864 உயர்ந்தது. இந்த மாதத்தில் பொங்கல் பண்டிகை மற்றும் முகூர்த்த தினங்கள் அதிக அளவில் வருவதால், தங்கத்தின் தேவை கூடுதலாக இருக்கும். ஆனால் இந்த நேரத்தில் தான் நகை விலையும் உயர்ந்து வருகிறது. தங்கம் விலை சவரன் ரூ.42 ஆயிரத்தை தாண்டி விடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து ஒரு சவரன் ரூ.41,768க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5,221க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் உயர்ந்து ரூ.74.40க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.74,400க்கும் விற்பனையாகிறது.