முதல்வரை சந்தித்து நன்றி கூறிய நரிக்குறவர் சமுதாய மக்கள்!!

 
ttn

நரிக்குறவ இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி, பழங்குடியின தகுதி பெற்றுத் தந்தமைக்காக  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நரிக்குறவர் சமுதாய மக்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

 தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலினை இன்று (15.9.2022) விருதுநகர் விருந்தினர் மாளிகையில், நரிக்குறவர் சமுதாய மக்கள் சந்தித்து, நரிக்குறவர் இன மக்கள் பயனடைய அவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி, பழங்குடியின தகுதி பெற்றுத் தந்தமைக்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

tn

மேலும், மாவட்ட நிர்வாகம் நரிக்குறவர் உள்ளிட்ட பழங்குடியின மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் நல்ல முறையில் செய்து தந்துள்ளது என்றும், வீட்டுமனைப் பட்டாக்களும் வழங்கப்பட்டு வருகின்றன என்றும், தங்களின் வாழ்வாதர முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதற்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். அப்போது  முதலமைச்சர், இருளர் உள்ளிட்ட பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய விவரங்கள் குறித்து அரசு உயர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் 49,506 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 23,472 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்கள்.

tn

இந்நிகழ்வின்போது, விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜெ.மேகநாதரெட்டி, இ.ஆ.ப., வருவாய்த்துறை உயர் அலுவலர்கள், நரிக்குறவர் சங்கத் தலைவர் வைரவன், உறுப்பினர்கள்  சுமோ ,  பொன்னுத்தாய், குமார்,  ஜஸ்வர்யா, மாணிக்கம்,  ஸ்ரீகாந்த், தாஸ்,  ராணி,  கமலா ஆகியோர் உடனிருந்தனர்.