மணமகனிடம் இருந்த தாலியை பறித்து மணமகளுக்கு கட்ட முயன்ற காதலன்
ஐயர் தாலி எடுத்து கொடுக்க மணமகன் தாலி கட்ட போன நேரத்தில் மணமகனிடமிருந்து தாலியை பறித்து மணமகளுக்கு கட்ட முயன்ற காதலரால் களேபரம் ஏற்பட்டிருக்கிறது. அந்த இளைஞரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். இதனால் திருமணம் நின்று விட்டது .
சென்னையில் தண்டையார்பேட்டை நெடுஞ்செழியன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் ரேவதி(20) இவருக்கும் தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் நேற்று காலையில் திருமணம் நடந்தது. நேதாஜி நகர் முருகன் கோவிலில் திருமணம் நடந்தது. காலை 6 மணி முதல் ஏழு முப்பது மணி வரைக்கும் முகூர்த்தம் குறிக்கப்பட்டு இருந்தது .
முகூர்த்த நேரத்தில் மணிகண்டன் கையில் ஐயர் தாலி எடுத்துக் கொடுத்திருக்கிறார். அப்போது ரேவதி கழுத்தில் மணிகண்டன் தாலி கட்ட இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் திடீரென்று மேடைக்கு வந்த இளைஞர் ஒருவர் மணிகண்டனின் கையில் இருந்த தாலியை பறித்து திடீரென்று ரேவதி கழுத்தில் கட்ட முயன்றிருக்கிறார். இதைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞரை அடித்து உதைத்து ஆர்கே நகர் போலீஸ் ஒப்படைத்துள்ளனர்.
போலீசாரின் விசாரணையில் இந்த இளைஞர் தண்டையார்பேட்டையை சேர்ந்த சதீஷ்(23) என்பதும் ரேவதியும் சதீஷும் ராயபுரத்தில் இருக்கும் நகை கடையில் ஒன்றாக வேலை பார்த்து வந்த போது இருவரும் காதலித்து வந்திருக்கிறார்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது. ரேவதி தன் காதலை பெற்றோரிடம் சொல்லாத தால் பெற்றோர் மணிகண்டனை பேசி முடித்து விட்டனர்.
திருமண தகவல் பற்றி ரேவதி சொன்ன போது இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்து இருக்கிறது. இந்த திருமணத்தை நடத்த விட மாட்டேன் எப்படியாவது நிறுத்தி விடுவேன் என்று சதீஷ் சவால் போட்டு இருக்கிறார். அதன்படியே நேற்று நடக்க இருந்த திருமணம் நின்று விட்டது.
ஆர். கே. நகர் போலீசில் இரு வீட்டாரும் புகார் அளித்துள்ளனர். பின்னர் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இந்த புகார் மாற்றப்பட்டு இருக்கிறது. இது குறித்து போலீஸ் விசாரித்து வந்த நிலையில், இந்த திருமணத்தில் இதற்கு மேல் தனக்கு விருப்பமில்லை என்று மணிகண்டன் சொல்ல, திருமண செலவை வழங்கி விடுமாறு கேட்க பெண் விட்டாலும் வேறு வழி என்று சம்மதித்து உள்ளனர். திருமணத்தை நிறுத்திய சதீஷை போலீசார் எச்சரித்து அனுப்பி இருக்கிறார்கள்.