பண்பற்ற முறையில் கேள்வியெழுப்பிய வழக்கறிஞர்.. மன்னிப்பு கேட்ட நீதிபதி..
பாகப்பிரிவினை வழக்கு ஒன்றின் குறுக்கு விசாரணையின் போது பெண்ணிடம் பண்பற்ற முறையில் வழக்கறிஞர் கேள்வி கேட்டதற்கு, உயர்நீதிமன்ற நீதிபதி மன்னிப்பு கேட்டு உள்ளார்.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பி.எஸ்.மணி என்பவருடைய வாரிசுகள் பாகப்பிரிவினைக்காக வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கின் குறுக்கு விசாரணையின் போது இரண்டாவது மனைவியின் மகன் தரப்பு வழக்கறிஞர், 3 பெண்களின் தந்தை மீதான உரிமை குறித்தும், அவரது தாயை அவமதிக்கும் வகையிலும் கேள்வி கேட்டுள்ளார். நீதிமன்றத்திலேயே இந்த விவகாரம் நடைபெற்றதால் உயர்நீதிமன்றம் மன்னிப்பு கேட்பதாக நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்திருக்கிறார். வழக்கறிஞர் பண்பற்ற முறையில் கேள்வி கேட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அதற்காக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.
மேலும் மனுதாரர்களை அவமானப்படுத்துவதோ, அவர்களை காயப்படுத்தவோ வேண்டாம் என்பதற்காக குறுக்கு விசாரணை இல்லை என்று தெரிவித்த நீதிபதி, தங்களது உரிமைக்காக நீதிமன்றத்தை நாடும் பெண்களின் நடத்தையை படுகொலை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கக் கூடாது என்றும் வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினர். இது ஒரு அரிதான வழக்காக பார்க்கப்படுகிறது. பொதுவாகவே நீதிபதிகள் மன்னிப்பு கேட்பது கிடையாது. அதுவும் கீழ் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணையின்போது எதிர்தரப்பு வழக்கறிஞர் பெண்களை அவமானப்படுத்தும் வகையில் கேட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டு இருக்கிறார்.