பேட்டை பயங்கரம்! பட்டப்பகலில் நடுரோட்டில் பெண் எரித்துக்கொலை
நடுரோட்டில் பட்டப்பகலில் ஒரு பெண்ணை தீ வைத்து எரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பி இருக்கிறார் ஒரு பெண். அவரை வலைவீசி தேடி வருகிறார்கள் போலீசார். நெல்லை மாவட்டத்தில் நடந்த இருக்கிறது இந்த சம்பவம்.
பேட்டை ரொட்டி கடை பேருந்து நிறுத்தத்திலிருந்து பழையபேட்டை செல்கின்ற வழியில் ஆதம் நகர். இப்பகுதியில் சாலையோரம் பெண்ணின் சடலம் தீயில் எரிந்து கொண்டிருந்ததை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். சிலர் பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள்.
போலீசார் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள் அப்பெண் உடல் முற்றிலும் தீயில் எரிந்து கரிக்கட்டையாக மாறியிருக்கிறது. அதன்பின்னர் மாநகர தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு கிடைத்த தடயங்களை சேகரித்து இருக்கிறார்கள். பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண்ணுக்கு 55 வயதுக்கு மேல் இருக்கும் என்றும் , அவரது கழுத்து பகுதி துப்பட்டாவால் இறுக்கிய நிலையில் இருந்ததும் தெரியவந்திருக்கிறது. கொலை செய்யப்பட்ட பெண் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்? கொலை செய்த பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த பகுதியில் இருந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழைய பேட்டையில் இருந்து ஒரு ஆட்டோ வந்ததும், அந்த ஆட்டோவில் இருந்து இரண்டு பெண்கள் இறங்கிச் சென்றதும் தெரியவந்திருக்கிறது.
சிறிது நேரத்திற்கு பின்னர் ஒரு பெண் மட்டும் வந்த ஆட்டோவிலேயே ஏறி சென்றதும் தெரிய வந்திருக்கிறது. ஆட்டோவில் தப்பிய அந்தப் பெண்தான் அவருடன் வந்த பெண்ணை எரித்துக் கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் வந்திருக்கிறது.
பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர கொலை பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன குற்றவாளிகளை பிடிப்பதற்காக . தப்பிச் சென்ற பெண் யார் அந்த பெண்ணை அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.