ஆளுநர் தேவை இல்லாமல் அரசியல் பேசி வருகிறார் - தினகரன் சாடல்!!
ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்று டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்த தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் கோட்டங்குப்பம் நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பதவி சண்டையால் யாருக்கு அதிமுக என்பது நீதிமன்றத்தில் வழக்காக உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் கூட்டணி குறித்த முடிவை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எடுக்கும். தமிழ்நாடு ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் தமிழகம் என்று சொல்ல வேண்டுமென ஆளுநர் தேவை இல்லாமல் அரசியல் பேசி வருகிறார் என்றார்.