ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு..
ஜல்லிக்கட்டு போட்டிகளில் எதிர்பாரதவிதமாக காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “ புதுக்கோட்டை மாவட்டம், கே.ராயவரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் போட்டித்திடலுக்கு வெளியிலிருந்த திரு.கணேசன் வயது 58), சிவகங்கை மாவட்டம்,சிராவயலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் போட்டித் திடலுக்கு வெளியிலிருந்த திரு.பூமிநாதன் வயது 52) மற்றும் தருமபுரி மாவட்டம், தடங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை சேகரிக்கும் இடத்தில் நின்றிருந்த திரு.கோகுல் வயது 14 ஆகியோரை போட்டியில் பங்குபெற்ற காளைகள் எதிர்பாராத விதமாக முட்டியதால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை கேட்டு மிகவும் வேதனையுற்றேன்.
இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் மூன்று லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.