நடுவழியில் பழுதாகி நின்ற மின்சார ரயில்.. 1 மணிநேரத்திற்கும் மேலாக தவித்த பயணிகள்..

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாம்பரத்தில் புறநகர் ரயில் சேவை ஒரு மணி நேரத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டது.
சென்னை தாம்பரம் ரயில் நிலைய 2வது நடைமேடையில் இருந்து கடற்கரை செல்லும் மார்க்கமாக மின்சார ரயில் ஒன்று புறப்பட்டுச் சென்றது. தாம்பரம் மற்றும் சாணிடோரியம் இடையே உயர்மின் அழுத்த கம்பியுடன், ரயில் இணையும் பகுதி பழுதானதால் ரயில் செல்ல முடியாமல் நடு வழியில் நின்றது. இதனால் தாம்பரம் - கடற்கரை இடையே இயக்கப்பட்ட மற்ற மின்சார ரயில்களும் ஆங்காங்கே அடுத்தடுத்து நிறுத்தப்பட்டன. பழுதான ரயிலானது இரண்டு தண்டவாளங்களை இணைக்கும் பகுதியில் பழுதாகி நின்றதால், சென்னையில் இருந்து தாம்பரம் நோக்கி இயக்கப்பட்ட ரயில்களும் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்பட்டன.
உடனடியாக பழுதாக நின்ற ரயிலை சீர் செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனாலும் ரயிலை சரி செய்யும் பணி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்டதால், புறநகர் மின்சார ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் ரயிலில் காத்திருந்த பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர். மேலும் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள், தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு தண்டவாளங்களில் இறங்கி நடந்து புறப்பட தொடங்கிவிட்டனர்.
இதனை அடுத்து ரயில்வே அதிகாரிகள் ஒரு மணி நேரம் போராடி பழுதடைந்து நின்ற ரயிலை சீர்செய்து அங்கிருந்து மிதவேகத்தில் ஓட்டிச் சென்று ரயில்வே பனிமணைக்கு கொண்டு சென்றனர். பழுதடைந்த ரயில் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டாலும், மற்ற ரயில்களை தொடர்ந்து ஆங்காங்கே நிறுத்தி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.பின்னர் ரயில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.