மது விற்பனை நேரத்தை குறைக்க அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை
தமிழகத்தில் நண்பகல் 12 இரவு 10 மணி வரை மதுபான கடைகள் செயல்பட்டுவரும் நிலையில் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்ற தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரைத்துள்ளது.
திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ராம்குமார், மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும், மாணவர்களுக்கு மது விற்பதை தவிர்க்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடமுடியாது, ஆனால் ஒரு சில பரிந்துரைகளை வழங்கலாம் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதன்படி தமிழக மக்களின் நலன்கருதி டாஸ்மாக் மதுபான கடைகளின் விற்பனை நேரத்தை நண்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை நேரத்தை குறைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரைத்துள்ளது. மதுபாட்டிலில் விலை இடம்பெற வேண்டும் மதுவிற்பவர்கள், வாங்குபவர்களுக்கு போலீசார் உரிய உரிமம் வழங்கி விற்பனை செய்ய வேண்டும் என்றும், மதுபானம் வாங்க, விற்க, உபயோகப்படுத்த, உரிமம் உள்ளவர்களுக்கு மட்டுமே என விதிமுறைகளை உருவாக்க வேண்டும் எனவும் உத்திரவிட்டுள்ளது. மதுபான விடுதிகளில் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள் தரமானவையாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது. 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்வதில்லை என்பதை உறுதிப்படுத்தவும் அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.