ஏழாவது மாடியில் இருந்து எட்டிப்பார்த்த குழந்தை..துயரத்தில் தாய்!
ஏழாவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த குழந்தை தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது. சென்னையில் நடந்திருக்கிறது இந்த துயர சம்பவம் .
சென்னை ஓட்டேரி பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 7வது மாடியில் வசித்து வந்த தம்பதிகள் விஜயகுமார்-வினிதா. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காலம் சென்று விட்டார். 2 வயது பெண் குழந்தையுடன் வினிதா இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்திருக்கிறார்.
வீட்டில் இருந்த சோபாவில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, ஏழாவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக கீழே எட்டிப்பார்த்து இருக்கிறது. அப்போது தவறி கீழே விழுந்திருக்கிறது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய், கீழே ஓடிச்சென்று பார்த்தபோது குழந்தை ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறது.
கதறி அழுதுகொண்டே, குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 7வது மாடியில் வீட்டு ஜன்னலில் இருந்து தவறி விழுந்து குழந்தை உயிரிழந்தது ஓட்டேரி பகுதியின் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.