பதற்றமான தொகுதிகள் கண்டறியப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் - மாவட்ட தேர்தல் அலுவலர்..

 
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி

ஈரோடு கிழக்கு தொகுதியில் பதற்றமான இடங்கள் கண்டறியப்பட்ட பிறகு பாதுகாப்பு ஏற்பாடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என  மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை நடத்தினார்.   ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக்குப் பின்னர்,ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான கிருஷ்ணனுண்ணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தைகள் அமலில் உள்ளது. தேர்தலை அமைதியாகவும், நியாயமான முறையில் நடத்திட போலீசார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் 10 சதவீதம் ஒப்படைக்கப்பட்டது. தனிநபர் ஒருவர் ரூ.50,000க்கு மேல் பணம் கொண்டு செல்லும் பட்சத்தில் உரிய ஆவணங்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், ரூ.10,000க்கு மேற்பட்ட மதிப்புடைய மது பானங்கள், பரிசு பொருட்கள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும்.  இடைத்தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. பதற்றமான தொகுதி கண்டறியப்பட்ட பிறகு பாதுகாப்பு ஏற்பாடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இடைத்தேர்தல் தொடர்பான நடத்தை விதிகள் குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது”என்று கூறினார்.