இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு - நன்றி தெரிவித்த ஈபிஎஸ்

 
EPS

இடைக்காலப் பொதுச் செயலாளராக என்னை தேர்வு செய்துள்ள அனைவருக்கும் நன்றி என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

ep

இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், 11.07.2022 அன்று நடைபெற்ற கழக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்காலப் பொதுச் செயலாளராக என்னை தேர்வு செய்துள்ள அனைவருக்கும் நன்றி! நம்மையெல்லாம் ஆளாக்கிய இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்கப்பட்டு, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் மாபெரும் ஆலவிருட்சமாய் வளர்க்கப்பட்ட, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடி நரம்புகளான, ரத்தத்தின் ரத்தமான, ஒன்றரைக் கோடித் தொண்டர்களுக்கும் எனது இதயமார்ந்த நன்றியை தெரிவித்து, வணங்குகிறேன்.

eps

கழகப் பொன்விழா ஆண்டில் வீருநடை போடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடைக்காலப் பொதுச் செயலாளராக, 11.07.2022 அன்று நடைபெற்ற கழக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில், என்னை தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன். உங்களில் ஒருவனாக, கிளைக் கழகச் செயலாளர் பொறுப்பில் தொடங்கி, 48 ஆண்டுகளாக கழகப் பணியாற்றி வரும் என்னை , புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோருக்குப் பின், இந்த மாபெரும் பேரியக்கத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தும்படி பணித்த உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி தெரிவிப்பதோடு, நீங்கள் இடும் கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.