பிரதமர் மோடியின் இதயம் தமிழகத்திற்காகவே எப்போதும் துடிக்கிறது - அண்ணாமலை பேட்டி

 
Annamalai

பிரதமர் மோடியின் இதயம் தமிழகத்திற்காக எப்போதும் துடித்துக் கொண்டிருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 
 
ராமேஸ்வரத்தில் இருந்து வாரணாசி செல்லும் காசி தமிழ்ச் சங்க ரயிலை தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றார். பின்னர் அந்த ரயிலில் மாணவர்களுடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: காசியில் ஒரு மாத காலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிக்கு நேற்று முதல் சிறப்பு ரயில் தொடங்கப்பட்டுள்ளது. முதல் ரயிலானது ராமேஸ்வரத்திலிருந்து தமிழக மாணவர்கள் 216 பேருடன் வாரணாசிக்கு செல்கிறது. சென்னையில் இருந்து வாரணாசிக்கு ரயிலை வழி அனுப்புவதற்கு சென்னை ஐ.ஐ.டி., நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதில் ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

annamalai

இது முழுவதும் அரசு நிகழ்ச்சி. எனவே, பொதுமக்கள் இணைந்து காசி தமிழ்ச் சங்கப் பயணத்தை ஒரு வெற்றிப் பயணமாக மாற்றுவது நமது கடமை. தொடர்ந்து இன்னும் 11 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. வரும் 19ம் தேதி காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, தமிழக மாணவர்களை சந்தித்து பேசுகிறார். இது தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இதிலிருந்து பிரதமர் மோடியின் உணர்வு தமிழகத்தின் மீது எப்படி உள்ளது என்பதை காட்டுகிறது. அவரின் இதயம் தமிழகத்திற்காக எப்போதும் துடித்துக் கொண்டிருக்கிறது. இதில் மாணவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.