ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியா? - அண்ணாமலை ஆலோசனை

 
annamalai

கடலூரில் பாஜக மைய குழு கூட்டம் தொடங்கியுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார். திருமகன் ஈவேராவின் மறைவால் ஈரோட் கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின் படி, காலியிடம் ஏற்பட்ட சட்டமன்ற தொகுதியில் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி புதிய சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனையடுத்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையை  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது.  

Erode East

இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது. இதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமாகா தலைவர் ஜிகே வாசன் இன்று அறிவித்துள்ளார். இதற்கிடையே இந்த தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியினர் விரும்புகிறார்கள். ஏற்கனவே இந்த மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வாக பா.ஜ.க.வை சேர்ந்தவர் உள்ளார். எனவே பா.ஜ.க. போட்டியிட்டால் கட்சி வளர்ச்சி பெறும் என்று அக்கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். எனவே இந்த தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுமா என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில்,  பா.ஜ.க.வின் மைய குழு கூட்டம் கடலூரில் இன்று நடைபெற்று வருகிறது.  இந்த கூட்டத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.