இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது - தமிழக பாஜக துணை தலைவர்

 
Ramalingam

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது என தமிழக பாஜக துணை தலைவர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார்.  இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது.  இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது. அதிமுகவை பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.  அ.ம.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி தனியாக போட்டியிடுகிறது. இதேபோல் பாஜகவும் தனித்து போட்டியிட ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில், ஈரோட்டில் பாஜக துணைத்தலைவர் ராமலிங்கம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- ஓ.பி.எஸ். - இ.பி.எஸ் அணிகள் இணைய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். எனினும், இரு அணிகளையும் இணைக்கும் வேலையில் பாஜக ஈடுபடாது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது, மக்களும் நினைக்கிறார்கள். இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து 2 நாளில் அண்ணாமலை அறிவிப்பார். கால அவகாசம் உள்ளதால், இரு அணிகளும் ஒன்றாக கூட சேரலாம். திமுக எதிராக உள்ள அணிகள் ஒன்றாக சேர வேண்டும். அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்றார்.