அண்ணாமலை, உதயநிதி உள்ளிட்ட யாருக்கும் நான் ரிப்போர்ட் கார்டு கொடுக்க முடியாது- தமிழிசை

 
tamilisai

திருவையாறில் நடைபெற உள்ள தியாகராஜ ஆராதனை தொடக்க விழாவிற்கு செல்ல புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விமானம் மூலம் திருச்சி வந்தார். 

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் எனக் கூறியிருக்கும்  கருத்தின் உட்பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிரிவினைவாத கருத்துக்கள் தமிழ்நாட்டில் அதிகமாக தற்பொழுது வர ஆரம்பித்துள்ள நேரத்தில் அதை அவர் கூறியுள்ளார். சில அரசியல்வாதிகள் தனிநாடு என பேசிவருவதால் ஆளுநர் அப்படி கூறியிருக்கிறார். நாடு துண்டாடப்படுவது கொண்டாடப்படக்கூடாது. தமிழ்நாட்டை தனி நாடு என எடுத்துக்கொள்ள கூடாது என்கிற அர்த்தத்தில் அதை அவர் கூறியுள்ளார். நான் தமிழ்நாட்டை சார்ந்தவள் தான். என் மொழி தமிழ் மொழி, என் மாநிலம் தமிழ்நாடு, என் நாடு பாரத தேசம். மதத்தை வாதப் பொருளாக ஆக்குவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாட்டில் அனைத்து மதங்களும் இணையாக மதிக்கப்படவேண்டும்.
 
ஆளுநர் அவரின் கருத்துக்களை கூறக்கூடாது என்பது இல்லை. அவர் தமிழ்நாட்டின் சில நிகழ்வுகளை பார்த்துவிட்டு தன்னுடைய கருத்துக்களை தெரிவிக்கிறார்” எனக் கூறினார். அப்போது அமைச்சர் உதயநிதியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை, உதயநிதி உள்ளிட்ட யாருக்கும் நான் ரிப்போர்ட் கார்டு கொடுக்க முடியாது என்றார்.