சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி.. ஜனவரியில் நடத்த தமிழக அரசு திட்டம்..

 
புத்தகக் கண்காட்சி

புத்தக வாசிப்பாளர்கள்,  சர்வதேச எழுத்தாளர்கள் மற்றும் நோபல் பரிசு பெற்றவர்களை நேரடியாக சந்திக்கும் வகையில் வரும் 2023ம் ஆண்டு ஜனவரியில் சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னையில் வருகிற ஜனவரி மாதம்  முதல் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்பட  இருக்கிறது.   தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழகம் இந்த கண்காட்சியை  நடத்துகிறது. பொது நூலக இயக்குனர் இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் கழக இணை இயக்குனர் சங்கர சரவணன் உள்ளிட்ட 5 பேர் குழுவினர் சமீபத்தில் ஜெர்மனி சென்று அங்கு நடந்த புத்தக கண்காட்சியை ஆய்வு செய்து அது குறித்த அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில் 3 நாள் இந்த கண்காட்சி நடத்தப்பட உள்ளது.  

புத்தகக் கண்காட்சி

இதில் பேச்சுக்கள், எழுத்தாளர்களுடன் உரையாடல், வெளியீட்டாளர்களின் சந்திப்பு உள்பட பல நிகழ்ச்சிகள் இடம்பெற இருக்கிறது. 30 முதல் 40 நாடுகளில் இருந்து எழுத்தாளர்கள் வருவார்கள் என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களது   புத்தகங்களும்  கண்காட்சியில் இடம்பெறுகின்றன. இதில் இடம்பெறும் சர்வதேச அரங்கில் வெளிநாட்டு எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை காட்சிப்படுத்தவும், விளம்பரப்படுத்தவும்  முன்னணி தமிழ் பதிப்பாளர்களை சந்திக்கவும் வாய்ப்பு வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த கண்காட்சிக்கு சர்வதேச எழுத்தாளர்கள் மற்றும் நோபல் பரிசு பெற்றவர்களை சிறப்பு விருந்தினர்களாக வரவழைக்கவும்  தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

 புத்தக கண்காட்சி
வெளியீட்டாளர்கள், இலக்கிய ஆசிரியர்கள் உள்பட பங்கேற்பாளர்கள் தங்களின் புத்தகங்களின் உரிமைகளை விற்க அல்லது வாங்கக்கூடிய வகையில் ‘உரிமைகள் மையம்’ என்ற நிகழ்வும் இதில் இடம்பெறுகிறது.  மேலும் கனடா, பின்லாந்து போன்ற அயல்நாட்டு மாணவர்களை ஈர்க்கவும், உயர்கல்வி உதவித்தொகை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எனவே, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்பார்கள் என்றும், மேலும் இந்த நிகழ்ச்சியின் போது உலகளாவிய மொழிபெயர்ப்பு மானியத் திட்டத்தை வெளியிடவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.