நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, ஊக்கத்தொகை நாளை முதல் வழங்கப்படும் - தமிழக அரசு உத்தரவு..

 
நாளை முதல் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, ஊக்கத்தொகை வழங்கப்படும் - தமிழக அரசு உத்தரவு..

சாதாரண மற்றும்  சன்னரக நெல்லுக்கான  கூடுதல் ஊக்கத்தொகையை   நாளை முதல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், காரீப் பருவம் 2002-2003 முதல் ஒன்றிய அரசின் முகவராக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்  செயல்பட்டு ஒன்றிய அரசின் தர நிர்ணயத்திற்குட்பட்டு நெல் கொள்முதல் செய்து வருகிறது. கடந்த 2021-2022 காரீப் கொள்முதல் பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது.  

நாளை முதல் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, ஊக்கத்தொகை வழங்கப்படும் - தமிழக அரசு உத்தரவு..

இந்த ஆண்டும் காரீப் கொள்முதல் 2022-2023 பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இந்த ஆண்டு வழக்கத்திற்கும் முன்பாகவே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையிலும், விவசாயிகளுக்கு தேவையான அளவு விதைகள் மற்றும் உரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையிலும், விவசாயிகளின் நலன் கருதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காரீப் 2022-2023 பருவத்திற்கான நெல் கொள்முதலை 1.09.2022 முதற்கொண்டு மேற்கொள்ள பிரதமரை கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் காரீப் 2022-2023 பருவத்திற்கான நெல் கொள்முதலை 1.09.2022 முதற்கொண்டு மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.

  தமிழ்நாடு

ஒன்றிய அரசு காரீப் 2022-2023 பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2040 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2060 என்றும் நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், நெல் உற்பத்தியினை பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் துயர்துடைத்து அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கோடும், தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டிலும் சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100ம் கூடுதல் ஊக்கத்தொகையாக வழங்க ஆணை பிறப்பித்து அதன்படியே, தற்போது சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2115 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2160 என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்கும் விவசாயிகளுக்கு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  மேலும், இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகையினை நாளை முதல் வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.