#JUSTIN விதிகளை மீறி விடுமுறை விட்டால் நடவடிக்கை! தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவி விடுதியில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
உயிரிழந்த மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் உறவினர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து பள்ளி உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை ஒட்டியுள்ள 5 மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேஷன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, தமிழகத்தில் நாளை ஒருநஆள் அனைத்து நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் விதிகளை மீறி தனியார் பள்ளிக்கு விடுமுறை விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என எவ்வித தகவலும், முன் அனுமதியும் மெட்ரிகுலேஷன் இயக்குனரகத்தில் பெறவில்லை என மெட்ரிகுலேஷன் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. முன் அனுமதி பெறாமல் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.