அதிகாரப்பூர்வ அறிவிப்பு - ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வு..
ஜூன் 26-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 625 பொறியியல் பணியிடங்களுக்கான ‘ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு’க்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 4 ஆம் தேதி வெளியிட்டிருந்தது. உதவிப் பொறியாளர், ஆட்டோமொபைல் பொறியாளர், ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ஜெனரல் ஃபோர்மேன் உள்ளிட்ட பதவிகளுக்கான இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற மே 3 ஆம் தேதி கடைசி நாளாகும்.
இந்த ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு வருகிற ஜூன் 26-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்படிருந்தது. இந்நிலையில் தற்போது இந்தத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து TNPSC செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில், CESE தேர்வு ஜூலை 2-ம் தேதிக்கு ( 02.07.2022 ) மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.