#Breaking தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் காலை உணவு திட்டம் இன்று தொடக்கம்!
தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் காலை உணவு திட்டம் இன்று தொடங்கப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும், ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ், சில மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ /மாணவியருக்கு முதற்கட்டமாக அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் மதுரை மாநகரில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
இந்நிலையில் மற்ற மாவட்டங்களில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் இன்றுமுதல் தொடங்கப்படவுள்ளது. திருச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர் ஆகிய மாவட்டங்களைப் பொறுத்தவரை ஊரகப் பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரு பள்ளியினை தேர்வு செய்தும், திருப்பூர், விருதுநகர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களைப் பொறுத்தவரை ஊரக / மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்து தேர்வு செய்தும் மற்றும், நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை மலைப்பகுதியிலுள்ள பள்ளியினை தேர்வு செய்தும் மாவட்ட அளவிலான திட்ட துவக்க விழாவை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.