அதிக கட்டணம் - தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை

 
assembly

தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களிடம் அதிகம் கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகத்தில் இயங்கி வரும் சில தனியார் மருத்துவ கல்லூரிகள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பலமடங்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக மாணவர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகம் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எழுதிய கடிதத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களிடம் அதிகம் கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும், கட்டண நிர்ணய குழு அறிவித்த கட்டணத்துக்கு அதிகமாக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் வசூல் செய்தால் புகார் அளிக்கலாம் என்றும், அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
அனைத்து சுயநிதி நிறுவனங்களும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.