சென்னை ஐஐடியில் யாருக்கும் புதிய வகை கொரோனா இல்லை - ராதாகிருஷ்ணன்

 
radhakrishnan

சென்னை ஐஐடியில் யாருக்கு புதிய வகை கொரோனா தொற்றான XE பாதிப்பு இல்லை என தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சென்னை வேப்பேரியில் உள்ள தமிழ் நாடு கால்நடை மருத்துவமனை கல்லூரியில்  உலக கால்நடை தினம் 2022 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் சுகாதார துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு துறை ஆணையத்தின் உறுப்பு செயலாளர் அனந்தகுமார் ஐஏஎஸ் , கூடுதல் தலைமை செயலாளர் ஜவஹர் ஐஏஎஸ், காவல்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் ஐபிஎஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதார துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:  பொது இடங்களில் கூட்டம் கூடும் போது தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க செய்யலாம். எனவே பொது இடங்களில் மக்கள் முககவசம் அணிய வேண்டும் 

iit

விவசாயிக்கு கூட தங்கள் வீட்டில் வளரும் கோழி குஞ்சிற்கு தடுப்பூசி செலுத்துகிறார்கள்.  அவர்களுக்கு உள்ள அக்கறை மக்களாகிய நமக்கு கொஞ்சம் கூட  ஏன் இல்லை? கொரோனா தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. ஐஐடியில் 7300 பேருக்கு பரிசோதனை செய்ததில் 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய பாதிப்பு 13 ஆகவும் இருக்கிறது. சற்று ஆறுதலான விசயம் என்றால் ஐஐடியில் புதிய வகை (XE) கொரோனா வரவில்லை. நோய் தொற்றுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்வதையே தீவிரப்படுத்த வேண்டி வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
 
தடுப்பூசி காலாவதி குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் செப்டம்பர் வரைக்கும் தடுப்பூசி இருக்கிறது. அதனையும் கண்காணித்து வருகிறோம். 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் நிபுணர்களிடம் ஆலோசனை செய்து வருகிறோம். வெளிமாநில பயணிகள் கண்காணிப்பு தொடர்பாக, தீவிரமாக கண்காணித்து  பரிசோதனை செய்து வருகிறோம் என்றும், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தில் இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை எனவும் கூறினார். பிற மாநிலங்களில் இருந்து வரக்கூடிய மக்கள் ஏதேனும் அறிகுறியுடன் சந்தேகம் இருந்தால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.