காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியா? முதலமைச்சர் தெளிவுபடுத்த வலியுறுத்தல்

 
PR Pandian

காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி-க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக பி.ஆர்.பாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:  காவிரி டெல்டாவில் பேரழிவு ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன், கச்சா பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு ஓஎன்ஜிசிக்கு அனுமதிக்கக் கூடாது என கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வந்தோம். 2020 ஆம் ஆண்டு முதல் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு ஓஎன்ஜிசி புதிய கிணறுகள் அமைக்கவும், ஏற்கனவே பேரழிவு ஏற்படும் சூழல் ஏற்பட்டு மூடப்பட்ட கிணறுகளை இனி செயல்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் காவிரி டெல்டாவில் பல இடங்களில் மூடப்பட்டுள்ள கிணறுகளை திறப்பதற்கும் எரிவாயு எடுப்பதற்கும் மறைமுக முயற்சிகளை ஓஎன்ஜிசி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 

கடந்த 2021 ஆம் ஆண்டு திடீரென நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகள் பகுதியை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்ததாக செய்தி வெளிவந்தது. அதனை எதிர்த்து போராடியபோது தமிழக முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு அவ்வாறு அறிவிப்பு செய்தது தவறானது. அதனை திரும்பப் பெறுகிறோம் என்று அறிவித்தார். அதன் படி திரும்பப் பெறப்பட்டது.இந்த நிலையில் தமிழக அரசின் அனுமதி இல்லாமலேயே திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெரியகுடியில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்காக கிணறு தோண்டும் பணி நிறைவடையும் நிலையில், கட்டுக்கடங்காத எரிவாயு வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதனால் பேராபத்து ஏற்பட்டு மோசமான நிலை ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அந்தக் கிணறு மக்கள் போராட்டத்தினால் தடை விதிக்கப்பட்டது.இக்கிணறு குறித்து 2014ல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில் கிணறு தோண்ட அனுமதி பெறவில்லை என்றும், அதனை அனுமதி இன்றி செயல்படுத்தக் கூடாது என நிறுத்தி வைக்கப்பட்டது.

delta

தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு மீண்டும் அந்த கிணற்றை திறப்பதற்கான நடவடிக்கையை ஓஎன்ஜிசி மேற்கொண்ட போது மன்னார்குடி கோட்டாட்சியர் தலைமையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முன்னிலையில் அக்கிணற்றுக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்கிணறு தோண்டப்பட்டால் பேராபத்து ஏற்படும் என்பதை எடுத்துரைக்கப்பட்டது. இதனை ஓஎன்ஜிசி நிர்வாகம் ஏற்றுக்கொண்டு நிரந்தரமாக மூடுவதற்கு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுஇந்த நிலையில் திடீரென 29.07.2022 அன்று மாலை மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ வழிகாட்டுதலோடு பெரியகுடி கிணற்றிலிருந்து எரிவாயு எடுப்பதற்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இந்த அறிவிப்பானது தற்போது தமிழக அரசின் கொள்கைக்கு முரணாக உள்ளது.2020 ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு 2016-க்கு முன் அனுமதி பெற்ற கிணறுகள் தவிர்த்து காவிரி டெல்டாவில் புதிய கிணறுகள் அமைக்கவோ, மூடப்பட்ட கிணறுகளை திறக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு ஓஎன்ஜிசி நிறுவன பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள கச்சா எடுக்கும் கிணறுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில், திடீரென இப்படி ஒரு கூட்டத்தை கூட்டுவதற்கு யார்? அனுமதி கொடுத்தது அப்படி என்றால் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான அரசு பாதுகாக்கப்பட்ட மண்டலத்தை மீண்டும் ஓஎன்ஜிசி-யிடம் தாரை வார்ப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளதா? அமைதிப் பூங்காவாக விளங்கும் காவிரி டெல்டாவை சீரழிக்க முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.இது குறித்து தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் வெளிப்படையாக தனது கொள்கை நிலையை அறிவிக்க முன்வர வேண்டும். ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீண்டும் பணிகளை மேற்கொள்ளவோ அல்லது பேராபத்து ஏற்படும் என்கிற காரணத்தால் மூடப்பட்டுள்ள எரிவாயு கிணறுகளை செயல்பாட்டுக்கு கொண்டு வருவோ அனுமதிக்கக் கூடாது.அப்படி அனுமதிக்கப்படும் பட்சத்தில் விவசாயிகள், பொதுமக்கள் ஒன்று திரண்டு தீவிரமான போராட்டத்தில் களமிறங்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.