இரட்டை இலை சின்னம் வைத்திருப்பவர்களுக்கே ஆதரவு - ஜான் பாண்டியன் அறிவிப்பு

 
Jhon Pandian

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வைத்திருக்கும் வேட்பாளருக்கு தான் ஆதரவு அளிக்கப்படும் என தமமுக கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார். திருமகன் ஈவேராவின் மறைவால் ஈரோட் கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகியுள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது.  இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது. அதிமுகவை பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.  அ.ம.மு.க.வும் தனியாக போட்டியிடுகிறது. 

eps

இதனிடையே அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக கூட்டனி கட்சியினரை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் தரப்பிற்கு ஆதரவு அளிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தமமுக கட்சியின் தலைவர் ஜான்பாண்டியனை நேரில் சந்தித்து ஆதரவு கோரினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன், இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாரிடம் உள்ளதோ அவர்களுக்கு தான் ஆதரவு அளிக்கப்படும் என்றார். இடைத்தேர்தலை ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இணைந்து சந்திக்க வேண்டும் எனவும், ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே நிலவும் உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்றும் கூறினார். அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வாய்ப்பு இல்லை எனவும் கூறினார்.