மக்கள் மீது அக்கறை இல்லாத திமுக அரசு - ஜி.கே.வாசன் காட்டம்

 
gk

மக்களின் மீது அக்கறை செலுத்தாத அரசாக தி.மு.க. அரசு உள்ளது எனவும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழக அரசு சொத்து வரியை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே மின் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும். தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து வருகிற 19-ந் தேதி த.மா.கா. சார்பில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மக்களின் மீது அக்கறை செலுத்தாத அரசாக தி.மு.க. அரசு உள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது.  தி.மு.க. ஆட்சியில் மக்களின் எண்ணங்கள் நிறைவேற்றப்படவில்லை. இதன் வெளிபாடு தேர்தல் முடிவில் தெரியவரும். காங்கிரஸ் கட்சி தற்போது பலவீனமடைந்துள்ளது. இதனால் ராகுல்காந்தி நடை பயணம் மேற்கொள்கிறார். அவரது நடைபயணத்தால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எந்த பயனும் இல்லை. தி.மு.க. அரசு காழ்புணர்வோடு செயல்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. திராவிட மாடலால் எந்த மாற்றமும் ஏற்படாது.  இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.