சேகர் ரெட்டிக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்கை ரத்து செய்த உச்சநீதிமன்றம்
சேகர் ரெட்டி க்கு எதிரான அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கினை உச்சநீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்டபோது புதிய 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டன. அந்த சமயத்தில் தொழிலதிபர் சேகர் ரெட்டி, அவரது உறவினர், அவரது ஆடிட்டர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது சேகர் ரெட்டி வீட்டிலிருந்து புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டன. வங்கி அதிகாரிகளின் உதவியுடன் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கியதாக புகார் எழுந்தது.
பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாக அறிவித்த 24 நாட்களில் 34 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் சேகர் ரெட்டி அவருக்கு தொடர்புடைய இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
முப்பத்தி ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன . இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. ஆனாலும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ மனுத் தாக்கல் செய்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சேகர் ரெட்டி மீதான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.
அமலாக்கத் துறையும் சேகர் ரெட்டி உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சேகர் ரெட்டி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
உயர் நீதிமன்றம் உரிய வகையில் பரிசீலிக்காமல் தீர்ப்பு அளித்து விட்டதாகவும், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார் . இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் சேகர் ரெட்டிக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்கை இன்று ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.