விசாரணைக்கு உகந்ததா?? ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான மனு தள்ளுபடி..

 
rn ravi

 குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல கட்டுப்பட்டவர்கள் அல்ல என்றுக் கூறி, ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான மனுவை  உயர்நீதிமன்றம் தள்ளுபடி  செய்தது.

 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராக இருந்து வருகிறார்.  இந்த நிலையில்  தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில்,  ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்கும்  ஆளுநர் ஆர்.என்.ரவி, எந்த தகுதியின் அடிப்படையில் ஆளுநர் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க  உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.   மேலும், ஆரோவில் அறக்கட்டளை சட்டப்படி, தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டவருக்கு ஊதியம், படி, ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்பதால் அவர் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்கிறார்.

Highcourt

இந்திய அரசியல் சாசனம் 158 (2) வது பிரிவின்படி, ஆளுநராக பதவி வகிப்பவர், ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்க கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஆரோவில் அறக்கட்டளை தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்து ஆர்.என்.ரவி, ஆளுநராக பதவியில் நீடிக்க தகுதியற்றவர்  ஆகிறார் என்று  குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை முன்பாக பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது.  அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசரணைக்கு உகந்தது தானா என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கில் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு  அதிரடி தீர்ப்பை வழங்கியது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பதவியில் இருக்கும் குடியரசுத் தலைவரோ,  ஆளுநரோ நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல கட்டுப்பட்டவர்கள் அல்ல என்றும்  விளக்கமளித்த  நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.