15 மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு..

 
மீனவர்கள்

எல்லை தாண்டி மீன்பிடித்தாகக் கூறி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை  நிபந்தனைகளுடன் இலங்கை நீதிமன்றம்  விடுதலை செய்துள்ளது.  

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் இலங்கை  கடற்படையினரால்  கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது.  அத்துடன் மீனவர்களின்  படகுகள், மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்துவதுடன், சிறைபிடித்துச் செல்வதையும் இலங்கை கடற்படை  வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இதனால்  மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.  அந்தவகையில்  நேற்று  ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த தமிழக மீனவர்கள் 14 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

மீனவர்கள்

இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 5ம் தேதி மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட சிறுவன் உட்பட 15 மீனவர்களின் வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி நிரஞ்சனி முரளிதரன் மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் மீனவர்கள் பயன்படுத்திய ஒரு  படகுக்கான விசாரணை வருகிற 25ஆம் தேதியும், மற்றொரு படகுக்கான விசாரணை ஆறு மாதத்திற்கு பிறகு விசாரிக்கப்படும் எனவும் தீர்பளித்தார். பின்னர்  விடுதலை செய்யப்பட்ட 15 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.