அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் - 3 தனிப்படைகள் அமைப்பு

 
admk

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதலில் ஈடுபட்டவர்களை கண்டறிவதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனது ஆதரவாளர்களுடன் சென்ற போது  ஓ. பன்னீர்செல்வம் தரப்பும்,  எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.  இதில் கல்வீச்சு, அடிதடி, கத்திக்குத்து உள்ளிட்ட சம்பவங்கள் ஏற்பட்ட நிலையில் வாகனங்களும்  சேதப்படுத்தப்பட்டது.  50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.  இந்த விவகாரத்தில் தற்போது 14 பேர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ராயப்பேட்டை தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.  இதனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் வருவாய் துறையினர் உடனடியாக தலைமை அலுவலகத்திற்கு வந்து அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். வேறு எந்தவிதமான அசம்பாவிதங்கள்  நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இதேபோல் நேற்று நடந்த மோதம் சம்பவம் தொடர்பாக  ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர் தலா 200 பேர் மீது  போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

admk office

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதலில் ஈடுபட்டவர்களை கண்டறிவதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 3 உதவி ஆணையர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே மோதல் நடைபெற்ற அதிமுக அலுவலகம் மற்றும் அந்த பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கலவரத்தில் ஈடுபபட்டவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.