சற்று குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.160 சரிவு..
தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்து வந்த தங்கம் விலை, இன்று சற்று இறக்கம் கண்டிருப்பது இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலையில் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாற்றங்கள் நிகழ்வது வாடிக்கையான ஒன்றுதான். இந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் மத்திய அரசு, தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதன்பிறகு தொடர்ந்து தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அடுத்து வரும் ஆவணி மாதத்தில் ஏராளமான முகூர்த்த நாட்கள் உள்ளதால் , அதனையொட்டியே தங்கம் விலை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரை ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏறுமுகத்தில் தான் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் ( சனிக்கிழமை) கிராம் ரூ. 4,815க்கும் , ஒரு சவரன் ரூ.38,520 க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து நேற்றைய தினம் ஞாயிறு என்பதால் தங்கம் விலை மாற்றமில்லை.. இந்நிலையில் இன்று தங்கம் விலை ஆறுதல் அளிக்கும் வகையில் குறைந்திருக்கிறது.
அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 20 குறைந்து , ஒரு கிராம் 4,795-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சவரனுக்கு ரூ. 160 குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38 ஆயிரத்து 360 ஆக விற்பனையாகிறது. இதேபோல் தொடந்து இன்றும் வெள்ளி விலையும் சரிவைக் கண்டிருக்கிறது. சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளி 63 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையான நிலையில், இன்று 40 காசுகள் குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் , ஒரு கிராம் வெள்ளி ரூ.63.30 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 63,300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.