சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்துகள்- 4 பேர் கைது
சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்துகள் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி அருகே செங்கமலப்பட்டி மற்றும் தாயில்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள தனியார்பட்டாசு தொழிற்சாலைகளில் அடுத்தடுத்து நடந்த வெடிவிபத்துகளில் திருத்தங்கல் மேலமாட வீதியைச்சேர்ந்த ரவி( வயது 58). சாத்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டி முனீஸ்வரி ( வயது 30), அமீர்பாளையம் சங்கர் (வயது 60) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
10-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் காயமடைந்து சிவகாசி, சாத்தூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கமலப்பட்டி பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்ததில் தொழிற்சாலையின் மேலாளர் கோபால்சாமி( வயது 50), போர்மேன்கள் காளியப்பன்( வயது 40) ராம்குமார்( வயது 38) ஆகிய மூவரையும் கைது செய்து, உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதேபோன்று தாயில்பட்டி பட்டாசு தொழிற்சாலை விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள வெம்பக்கோட்டை காவல்நிலைய போலீசார் 4 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததில், தொழிற்சாலையின் போர்மேன் கண்ணன் (வயது 48) என்பவரை கைது செய்து உரிமையாளர்களான மாயக்கண்ணன் அவரது மனைவி ஆறுமுகத்தாய், மற்றும் கந்தசாமி ஆகிய மூவரையும் வலை வீசி தேடிவருகின்றனர். ஒரே நாளில் காலை மற்றும் மாலை வேலைகளில் அடுத்தடுத்து சிவகாசி வட்டாரத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் தொடர்ந்து வெடி விபத்துகள் நடந்து ஒரு பெண் தொழிலாளி உள்பட 3 தொழிலாளர்கள் உயிரிழந்து, 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளது பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.