சீர்காழி : 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
சீர்காழி தாலுகாவில் இன்று ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரைவிலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த அதிக கனமழையினால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளில் மறு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் சீர்காழி தாலுகாவில் உள்ள ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியினால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மட்டும் வரலாறு காணாத வகையில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆறு மணி நேரத்தில் 44 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இந்த அதிக கனமழையினால் சீர்காழி பகுதி முழுவதும் வெள்ளைக்காடாக மாறி இருக்கிறது. சீர்காழியை சுற்றி உள்ள கிராமங்கள் அனைத்தும் தனித்தீவு போல் காட்சியளிக்கின்றன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் சீர்காழி வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவித்து உத்தரவிட்டிருந்தார் அம்மாவட்ட ஆட்சியர் லலிதா. பள்ளிகளில் தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்ற அந்த உத்தரவினை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், சீர்காழி தாலுக்காவில் உள்ள 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று 18ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் லலிதா.