மதுரை விமான நிலையத்தில் கடுமையாக நடந்து கொண்ட அதிகாரி - நடிகர் சித்தார்த் வேதனை!!

 
tn

நடிகர் சித்தார்த் மதுரை விமான நிலையத்திற்கு குடும்பத்துடன் சென்ற போது அங்கிருந்த அதிகாரி ஒருவர் தங்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறியுள்ளார். 

tn

இதுக்குறித்து நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. நேற்று நான் ஷேர் செய்து இருந்த ஸ்டோரியை பார்த்து பலரும் அக்கறையாக கேள்வி கேட்டு இருந்தனர். நான் பலமுறை மதுரை விமான நிலையம் வழியாக மற்ற நகரங்களுக்கு சென்றுள்ளேன். இதுவரை அங்கு எனக்கு எந்தவொரு சங்கடமும் நேர்ந்ததில்லை. இம்முறை, எனது குடும்பத்தினருடன் நான் சென்று இருந்தேன். அப்போது  அங்கிருந்த சிஐஎஸ்எப் அதிகாரி, எங்களிடம் கடுமையாக நடந்து கொண்டார். என்னுடைய பையை ஆய்வு செய்த அவர், என்னுடைய உபகரணங்களை தூக்கி எறிந்தார். நான் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொன்ன போதும், இந்தி மொழியில் பேசினார்.  எனது அம்மாவின் பையில் இருந்த சில்லறைகளை வெளியே எடுக்க சொன்ன அவர், இது இந்தியா, நாங்கள் சொல்வதைதான் நீங்கள் செய்ய வேண்டும் என்றும் கூறினார். என்னுடைய சகோதரியிடம், மருத்துவ ஊசிகளை எதற்காக வைத்து இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார். ஒரு பொது இடத்தில் அனைவரின் முன், தனிப்பட்ட விஷயங்களை கேட்பது தவறு என்பதால், என் எதிர்ப்பை தெரிவித்தேன்; என் முகத்தில் இருந்த மாஸ்க்கை கழட்டிய பின், அங்கிருந்த ஒருவர், நான் உங்களின் ரசிகர். நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் செல்லலாம் என்றார்.

இதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. நான் ஒரு பிரபலம் என்பதால் எங்களுக்கு நீங்கள் அனுமதி கொடுத்தீர்கள். ஆனால் பொது மக்களிடம் இப்படிதான் மோசமாக நடந்து கொள்வீர்களா? பெரியவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று அவரிடம் சொன்னேன்; என் பெற்றோர்களிடம்  மூர்க்கத்தனமாக நடந்து கொண்டார். இது என்னை அச்சுறுத்தியது. என்னை ஸ்பெஷலாக நடந்துங்கள் என்று கூறவில்லை. உங்கள் பெற்றோருக்கு இது போன்று நடந்து இருந்தால் நீங்கள் என்னை போன்றுதானே நடந்துகொள்வீர்கள் ?” என்று சித்தார்த் பதிவிட்டுள்ளார். சித்தார்த்தின் இந்த பதிவிற்கு பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து கூறி வரும் நிலையில், சிலரோ படவாய்ப்புக்காக பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கிறார் என்று கூறி வருகின்றனர்