மலேசியாவில் தட்டுப்பாடு.. நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி அதிகரிப்பு..

 
egg

மலேசியாவில்  முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து, நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட முட்டைக் கோழிப்பண்ணைகளில் மொத்தம் 5.5 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்பட்டு   தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.  அகில இந்திய அளவில், நாமக்கல் மண்டலம் முட்டை உற்பத்தியில் 2-வது இடத்திலும், முட்டை ஏற்றுமதி தொழிலில் முதலிடத்திலும் இருந்து வருகிறது.

மலேசியாவில் தட்டுப்பாடு..  நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி அதிகரிப்பு..

பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், தற்போது முதன்முறையாக கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி முதல்,  விமானம் மூலம் மலேசியாவிற்கு ஏற்றுமதி தொடங்கி உள்ளது. மலேசியாவில்  முட்டை உற்பத்தி செய்யப்பட்டாலும், அவர்களது தேவைக்கு அது போதுமானதாக இல்லை.  இதனால்  நாமக்கல் பகுதிகளில் இருந்து முட்டைகள் ஏற்றுமதி அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. இன்னும் சுமார் 6 மாதங்களில் மலேசியாவுக்கான இந்தியாவின் முட்டை ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதுகுறித்து அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர் சங்கத்தின் செயலாளர் நாமக்கல் வல்சன் பரமேஸ்வரன் தெரிவித்திருப்பதாவது, “நாமக்கல் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 10 கண்டெய்னர் மூலம் 50 லட்சம் முட்டைகள் முதன் முதலாக மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. தொடர்ந்து ஆர்டர்கள் கிடைத்து வருகிறது.

மலேசியாவில் தட்டுப்பாடு..  நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி அதிகரிப்பு..

 இந்த மாதம் மட்டும் 20 கண்டெய்னர் மூலம் 1 கோடி முட்டைகள் அனுப்பப்பட உள்ளது. இது பிப்ரவரி மாதம் இது 40 கண்டெய்னர்களாக உயரும் வாய்ப்புள்ளது. நாமக்கல் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தரமாகவும், ஏற்றுமதிக்கான எடையும் சரியாக உள்ளதால், பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும் நாமக்கல் முட்டையை வாங்க தொடங்கி உள்ளனர். மற்ற நாடுகளை விட இந்தியாவில் முட்டை விலை குறைவாகவே உள்ளது. முட்டை ஏற்றுமதிக்கு இதுவும் ஒரு வாய்ப்பாகும். ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக விரைவில் மேலும் பல நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யும் சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது.” என்று தெரிவித்தார்.