#Breaking: இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை சவரன் ரூ.43,000ஐ தாண்டியது...
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரன் ரூ. 43,000ஐ கடந்து விற்பனையாகி வருகிறது.
கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் (டிசம்பர் ) இருந்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்பட்டு வந்தாலும், இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகமாக இருப்பதால் அதன் விலையேற்றம் அதிரடியாக இருந்து வருகிறது. இதன் பிறகு தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என்றும், தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இது நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகள், தங்கத்தில் முதலீடு செய்ய காத்திருப்பவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த 24ம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 256 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 42,840 ரூபாய்க்கு விற்பனையானது. அன்றைய தினம் வெள்ளி விலையும் 70 பைசா குறைந்து, ரூ. 74 விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தினம், சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.42,760-க்கும், ஒரு கிராம் ரூ.5,345-க்கும் விற்கப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி ரூ. 74க்குகே விற்பனையானது.
இந்நிலையில் தொடர்ந்து தங்கம் விலை உயர்வைக் கண்டு வரும் நிலையில், ஒரே நாளில் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி ஆபரண தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 5,380 ரூபாய்க்கும், ஒரு சவரன் 43,040 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்த விலையேற்றம் நகைப்பிரியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 அதிகரித்து ரூ.75-க்கு விற்பனை ஆகிறது.