நகைப்பிரியர்களுக்கு ஷாக்.. ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..
நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் விலை நேற்று சற்று குறைந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 456 அதிரடியாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு தங்கத்தின் மீதான ஆர்வம் எப்பொதுமே கொஞ்சம் அதிகம் தான்.. அதனால் தான் தென்னிந்தியாவிலேயே அதிகளவில் தங்கம் வைத்துள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதேநேரம் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக அதிகபட்ச ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியான உயர்வை எட்டுவது வாடிக்கையாகிவிட்டது. பின்னர் அவ்வப்போது இறங்குமுகமும் காட்டுவதுண்டு.
ஆனால், தங்கம் விலையேற்றம் என்பது எப்போதும் அதிரடியான உயர்வாகவே இருக்கிறது. நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.136 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,064 -க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.4,758-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.456 உயர்ந்துள்ளது. அதன்படி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,815க்கும், சவரன் ரூ.38,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் அதிகரித்து ரூ.67.40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையேற்றம் நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.