நுங்கு சாப்பிட்டா மார்பகம்.. கையை கட்டி விளக்கம் அளித்த ஷர்மிகா
நுங்கு சாப்பிட்டா மார்பகம் பெரிதாகும், ஒரு கப் குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்திய சித்த மருத்துவர் ஷ்ர்மிகா சித்த மருத்துவ கவுன்சிலில் ஆஜராகி கைகட்டி விளக்கம் அளித்திருக்கிறார். எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கவும் அவருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
சித்த மருத்துவர் ஷர்மிகா. இவர் பாஜக நிர்வாகி டெய்சி சரணின் மகள் ஆவார். இவர் யூடியூப் வலைத்தளத்தில் அழகு மற்றும் சித்த மருத்துவ குறிப்புகளை சொல்லி வந்துள்ளார் . அப்போது, ஒரு கப் குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடி விடும் என்றும், நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும் என்றும் சொல்லி சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
புற்று நோய் உள்ளிட்ட பல வியாதிகளுக்கு இவர் சொன்ன மருத்துவர் குறிப்புகள் கண்டு சித்த மருத்துவ உலகம் அதிர்ந்து போய் இருக்கிறது. இவரின் வீடியோக்களை பார்த்துவிட்டு பலரும் இவரை கடுமையாக கமெண்ட் செய்து வந்துள்ளனர். அதற்கு அடுத்த கட்டமாக தமிழ்நாடு சித்த மருத்துவக் கவுன்சிலில் புகார் அளித்து வந்துள்ளனர்.
விதிமுறைகளுக்கு முரண்பாடாக கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவதாக புகாரில் இருந்ததை அடுத்து கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில் பதிவாளர், ஷர்மிகாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதில், சித்த மருத்துவ தொழில் விதிமுறைகளுக்கு முரண்பாடான கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்ததால் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் . ஆகவே, 24. 1 .2023 அன்று பிற்பகல் 11 மணிக்கு நேரில் வருகை தந்து விளக்கமளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் சித்த மருத்துவர் ஷர்மிகா தனது வழக்கறிஞருடன் இன்று தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில் பதிவாளர் கணேஷ் , சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் கனகவல்லி, சித்த மருத்துவத் துறை இணை இயக்குனர் பார்த்திபன், மாநில மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் மருந்து ஆய்வாளர் சுஜி கண்ணம்மா முன்னிலையில் ஆஜராகி கைகட்டி விளக்கம் அளித்தார்.
ஷர்மிகாவின் வழக்கறிஞர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது, கேள்விக்கான விளக்கத்தை எழுத்து பூர்வமாக அளிப்பதாக தெரிவித்துள்ளார். சித்த மருத்துவம் குறித்து சர்மிளா கூறிய தகவல்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர்கள் கேள்விக்கான பதில்களை பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் எழுத்து பூர்வமாக அளிப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும், சித்த மருத்துவம் குறித்து சர்மிளா சொன்ன கருத்துக்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் சித்த மருத்துவ சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.