புத்தாண்டு அன்று பார்ட்டி நடத்தினால் சம்மந்தப்பட்ட நட்சத்திர விடுதி சீல்
2023ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை காவல்துறை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “2023 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் 16 ஆயிரம் காவல்துறையினர் மற்றும் 1500 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறோம். 368 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுபவர்கள் மற்றும் பைக் ரேசிங் ஈடுபடுவர்களை கண்காணிக்க 28 ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் 53 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை கொண்டு தொடர் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர்.பைக் ரேசிங் மற்றும் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 25ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு இடையூறாக பைக் ரேஸ் மற்றும் அதிவேகமாக வாகனத்தை இயக்கியதாக 360 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வருகிற 31ஆம் தேதி இரவு அசம்பாவிதங்களை தடுக்க அனைத்து மேம்பாலங்களும் மூடப்படும். பெசண்ட் நகர், திருவான்மியூர் ஆகிய கடற்கரைகளில் வாட்ச் டவர், நைட் விஷன் டிரோன் கேமராக்கள், குதிரைப்படை உள்ளிட்டவை பயன்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளோம்.வருகிற 31ஆம் தேதி இரவு கடலில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. இரவு 8மணி முதல் ஆர்.பி.ஐ முதல் லைட் ஹவுஸ் வரையிலான காமராஜர் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. புத்தாண்டை கொண்டாட வருபவர்களின் போக்குவரத்து பார்க்கிங் வாலாஜா சாலை, சிவானந்தா சாலை உள்ளிட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்து நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்களை வரவழைத்து ஆலோசனை நடத்தியுள்ளோம், அதில் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும், 80% நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறோம். மாலை 6மணி முதல் இரவு 1 மணி வரை மட்டுமே பார்ட்டிக்கு அனுமதி. பார்ட்டியின் போது பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு 1மணிக்கு மேல் பார்ட்டி நடத்தினால் சம்மந்தப்பட்ட நட்சத்திர விடுதி சீல் வைக்கப்படும். 18வயதுக்குட்பட்டோரை நட்சத்திர விடுதிக்குள் அனுமதிக்க கூடாது. சிறுவர்கள் வாகனங்களை இயக்கினால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தாண்டு விபத்தில்லாமல் புத்தாண்டு தினத்தை கொண்டாட வேண்டும். கடந்தாண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு சாலை விபத்து மரணங்கள், குற்றங்கள், கொலைகள் குறைந்திருக்கிறது” எனக் கூறினார்.