பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீது பாலியல் வழக்கு பதிவு...
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாணவி ஒருவர் அளித்த புகாரின்பேரில் பதிவாளர் கோபி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
சேலத்தை அடுத்த கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலையுடன் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி என 105 கல்லூரிகள் இணைவு பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் ,பிரசித்திபெற்ற ஒன்றுதான் பெரியார் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணிபுரிந்து வருபவர் கோபி. இவர் வேதியியல் துறையின் பேராசிரியராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கோபி மீது ஆராய்ச்சி மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை ஆய்வு மாணவியாக இருந்து வந்த ஒருவர், பேராசிரியர் விடுமுறை தினங்களில் தன்னை பல்கலைக்கழகத்திற்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார். சேலம் மாநகர கருப்பூர் காவல் நிலையத்தில் பதிவாளர், பேராசிரியர் கோபி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.