செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்குகள் - விசாரணை நடத்தப்படும் என்ற தமிழக அரசு
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்குகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது தமிழ்நாடு காவல்துறை.
தமிழக மின்சார துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி . இவர் கடந்த 2011 -15 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக சொல்லி பலரிடம் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
இந்த அடிப்படையில் செந்தில் பாலாஜி அவரது நண்பர்கள் சகாயராஜன், பிரபு, அன்னராஜ், தேவசகாயம் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய பிரிவு போலீசார் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர். சென்னை எம். பி., எம். எல். ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணையில் உள்ளது.
தன் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்த போது, அவருக்கு தமிழக காவல்துறை தரப்பில் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்த தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதனால் மூன்று வழக்குகளிலும் விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து வழக்குகளின் இறுதி விசாரணைக்காக செப்டம்பர் 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார் நீதிபதி.