சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி டி.ராஜா நியமனம்..
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அலகாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக பதவி வகித்த அவரை உச்ச நீதிமன்றம் கொலிஜியம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது . அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி முனிஷ்வர்நாத் பண்டாரி ஓய்வு பெற்றார்.
அதன்பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமிக்கப்பட்டார். இவர் செப்டம்பர் 21ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். ஆகையால் சென்னை உயர்நீதிமன்ற புதிய பொறுப்புத் தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் 22 முதல் நீதிபதி ராஜா , தலைமை நீதிபதி பொறுப்புகளை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி டி.ராஜா மதுரை மாவட்டம் தேனூரில் , கடந்த 1961ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி
பிறந்தவர்.
பின்னர் மதுரை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற அவர், 1988, ஜூன் முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை தொடங்கினார். டெல்லி உயர் நீதிமன்றம், மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சிவில், கிரிமினல், அரசியலமைப்பு மற்றும் சேவை சட்டங்கள் தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வாதிட்டுவந்தார். 2009 மார்ச்சில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் தற்போது மூத்த நீதிபதியாக இருந்து வருகிறார்.