ஜன.29ம் தேதி வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் - சீமான்..
நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்து வரும் 29ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட அனைத்துக் கட்சிகளும் ஆர்வம் காட்டி வருவதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்தார். அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட பெண் வேட்பாளருக்கு பதில், புதிய பெண் வேட்பாளரை களமிறக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஒருவரின் வெற்றிக்காக ஓட்டுக்களை பிரிக்கிறோம் என்பது போன்ற விமர்சனங்களை கண்டு கொள்வதில்லை என்றும் அவர் கூறினார்.
சென்னை மேளத்தால், தமிழ்நாட்டில் நாதஸ்வர கலை அழிந்து கொண்டிருக்கிறது என்றும், அதை மாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முன்னதாக தேர்தல் தொடர்பாக சென்னை உட்பட 11 மாவட்ட நிர்வாகிகளுடன் சீமான் ஆலோசனை நடத்தினார். நாளை ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடனான கூட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து 26 ஆம் தேதி வரையில் நிர்வாகிகளுடன் சீமான் ஆலோசனை நடத்துகிறார். 29ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.