மியான்மர் நாட்டில் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

 
seeman

மியான்மர் நாட்டில் தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.  

தாய்லாந்து நாட்டிற்கு வேலை தேடிச் சென்ற தமிழக இளைஞர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மியான்மர் நாட்டுக்கு கடத்திச் சென்று, சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுத்தி, கொடுமைப் படுத்துவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மியான்மர் நாட்டில் தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.  

seeman

இது தொடர்பாக  சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வெளிநாடு வேலை என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்ட தமிழர்கள் மியான்மர் நாட்டுச் சிறையில் சிக்கி தவிக்கும் காணொலி அதிர்ச்சியளிக்கிறது. தற்போது மியான்மர் நாட்டு சிறையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களை மீட்க தூதரகம் மூலம் இந்திய மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தமிழர்கள் மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.