சேடப்பட்டி முத்தையாவின் உடல் நாளை மாலை நல்லடக்கம்

உடல்நலக்குறைவால் உயிரிழந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் உடல் நாளை மாலை நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் சேடப்பட்டி முத்தையா 1991 முதல் 1996 வரை சட்டப்பேரவைத் தலைவராக இருந்தவர். சேடப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை தமிழகச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் "சேடபட்டியார்" என்று அழைக்கப்பட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்த இவர் அதிமுக சார்பில் நாடாளுமன்றத்திற்கு பெரியகுளம் தொகுதியிலிருந்து இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையேற்ற நடுவண் அமைச்சரவையில் தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றியுள்ளார். இதையடுத்து அதிமுகவிலிருந்து விலகி 2006ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். சேடப்பட்டி முத்தையாவுக்கு சகுந்தலா என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவருடைய இளைய மகன் மு.மணிமாறன் திமுகவின் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேடப்பட்டி முத்தையா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் உடல் நாளை மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது. நாளை மாலை 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் எனவும், இறுதிச் சடங்கு திருமங்கலத்தை அடுத்த குன்னத்தூர் பகுதியை அடுத்த முத்தப்பன்பட்டியில் அவரது தோட்டத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.