கரூர், சேலம், செங்கல்பட்டு, பெரம்பலூர், மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. வங்கக்கடலில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் எனவும் 18 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “தொடர்ந்து நாளையும், (12.11.2022) நாளை மறுநாளும் (13.11.2022) மிக மற்றும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் (ஆரஞ்சு அலர்ட்) எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் பொதுமக்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம். பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும். நீர்நிலைகளுக்கு குளிக்க செல்லக் கூடாது. மின் கம்பங்களை தொடக்கூடாது. குடிநீரை கொதிக்க வைத்து அருந்த வேண்டும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளை 04364-222588 – 9487544588 என்ற எண்ணிலும் 8148917588 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 12.11.22 அன்று விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிவித்துள்ளார். கனமழை எச்சரிக்கை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை(12.11.22) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்திலும் தொடர் மழையின் காரணமாக நாளை (12.11.2022) பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கன மழை முன்னெச்சரிக்கையாக நாளை(12.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் நாளை சனிக்கிழமை என்றாலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படுவதாக இருந்த நிலையில் மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித், “நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.