புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று அதிகாலை திடீரென்று கனமழை பெய்தது. இதனால் அண்ணா சாலை, புஸ்சி வீதி, சின்ன சுப்புராய பிள்ளை வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும் புதுச்சேரி நகரில் உள்ள கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர், பாவணன் நகர் மற்றும் பல்வேறு கிராமப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. தொடர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி அடுத்த சின்ன வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் அங்கு பொருத்தப்பட்டுள்ள உயர் ரக கண்காணிப்பு கோபுரங்கள், பாதுகாப்பு தடுப்புகள், நிழல் குடைகள் கடல் சீற்றத்தின் காரணமாக கடல் நீரால் அடித்து சொல்லப்பட்டு சேதம் அடைந்துள்ளது. மேலும் கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை தண்ணீரில் இறங்க வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் அங்கு இருக்கும் பாதுகாவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
நாளை (03/11/2022) அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்யும் என்ற சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பையொட்டி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அறிவிக்கப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.